Monday, August 24, 2015

தேர்தலுக்கு முன்னர் ஓட்டமாவடியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக் கொலைச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது



மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பகுதியில் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் தாக்குதலுக்கு பயன்படுத்திய கைத்துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டமாவடி ஹுதாப் பள்ளி புகையிரத வீதிக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சுசூட்டுச் சம்பவத்தில் ஓட்டமாவடி பிறைந்துரைச்சேனை பகுதியைச் சேர்ந்த முஹம்மத் அமீன் (37 வயது) என்பவர் கொல்லப்பட்டார்.
இது தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில் துப்பாக்கிசூடு நடாத்துவதற்கு உதவியதாக சந்தேகிக்கப்படும் நபர் சனிக்கிழமை பிற்பகல் எஸ்.எம்.ஜி. ஹாஜியார் வீதியில் வைத்து கைதுசெய்யப்பட்டதுடன் சம்பவத்திற்கு பயன்படுத்தியதாகக் கருதப்படும் கைத்துப்பாக்கியும் சந்தேக நபரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி வி.ஏ. அர்ஜுனவின் தலைமையில் மாவட்ட பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவு சார்ஜன்ற் எம்.டி.எம். தாஹா ஆகியோர் கொண்ட குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் இன்னமும் தலைமறைவாகியுள்ளதாகத் தெரிவித்த பொலிஸார் அவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் கூறினர்.
பொதுத் தேர்தலுக்கு 2 தினங்கள் இருந்த தறுவாயில் இந்தச் சம்பவத்தை அரசியல்வாதிகள் தமது பிரச்சாரத்திற்காகவும் பயன்படுத்திக் கொண்டனர்.
ஆயினும் இந்த சூட்டுச் சம்பவம் குடும்ப பிரச்சினையால் இடம்பெற்றதாக ஆரம்ப விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-வாழைச்சேனை நிருபர் / அப்துல்லாஹ்-


SHARE THIS

Author:

0 comments: